சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.;

Update:2024-12-22 01:39 IST

திருச்சி,

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் குட்செட் சாலையை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 70). கூலி தொழிலாளியான இவர், திருச்சியை சேர்ந்த தலா 8 வயதுடைய 2 சிறுமிகளுக்கு அவ்வப்போது தின்பண்டங்கள் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு அந்த சிறுமிகளுக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து மறைவான இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதில் பயந்துபோன சிறுமிகள், நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறாமல் இருந்தனர். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான சிறுமிகள், தன் வயதுடைய சிறுவன் ஒருவனிடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமை குறித்து அச்சத்துடன் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து, சிறுவன், அந்த சிறுமிகளின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

இதையடுத்து, 2 சிறுமிகளையும் அவர்களது பெற்றோர் அழைத்து விசாரித்தனர். அவர்களிடம் சிறுமிகள் நடந்தவற்றை அழுதபடி கூறினர். இது தொடர்பாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து பழனிவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் பழனிவேலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் 2 சிறுமிகளுக்கு நிவாரண தொகையாக தலா ரூ.1 லட்சம் வழங்கவும் அரசுக்கு மகிளா கோர்ட்டு மாவட்ட நீதிபதி ஸ்ரீவத்சன் உத்தரவிட்டார்.

 

Tags:    

மேலும் செய்திகள்