மொழி அரசியலை விட்டுவிட்டு தி.மு.க. ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட வேண்டும் - மத்திய மந்திரி எல்.முருகன்

மொழி அரசியலை விட்டுவிட்டு தி.மு.க. ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

Update: 2024-10-20 21:24 GMT

சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே பா.ஜ.க.வின் அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு ஆட்டோ ஸ்டாண்டு உள்ளது. இங்கு 8-வது ஆண்டு ஆயுத பூஜை விழா நேற்று காலை கொண்டாடப்பட்டது. இதில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்துகொண்டு 60 ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பா.ஜ.க. மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழக மக்கள் ஆன்மிகத்தின் பக்கமும், தேசியத்தின் பக்கமும் இருக்கிறார்கள். கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்ட விழாவை சர்ச்சையாக்க வேண்டும் என்பதே தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் திட்டம். ஆனால், தி.மு.க. சொல்லும் பிரிவினைவாத அரசியலை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

தமிழின் பெருமையை உலகெங்கும் பிரதமர் மோடி பேசி வருகிறார். உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையத்தையும் தொடங்கி வைத்துள்ளார். திருக்குறளை 35 வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்க செய்துள்ளார். பா.ஜ.க. தமிழுக்கு எதிரான கட்சி என்பது போன்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அது மக்கள் மத்தியில் எடுபடாது. மொழி அரசியலை விட்டுவிட்டு தி.மு.க. ஆக்கப்பூர்வமான அரசியலில் ஈடுபட வேண்டும்.

தி.மு.க.வினர் நடத்தும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அந்த பள்ளிகளை மூட தயாரா?. அங்கு கிடைக்கும் வசதிகள் மெட்ரிக் பள்ளி மற்றும் அரசு பள்ளிகளில் கிடைக்காமல் இருப்பது ஏன்?. இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை. விருப்பப்பட்ட மொழியையும் கற்றுக்கொள்ளலாம் என்பதுதான் மும்மொழிக் கொள்கை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்