நீடிக்கும் கனமழை: சென்னையில் ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-10-15 14:48 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழகத்தில் கன மழை பெய்து வரும் பெய்து வரும் நிலையில் வானிலை மையம் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் அதிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நீடிக்கும் கனமழை காரணமக சென்னையிலிருந்து இயக்கப்படும் ரெயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

நேற்று மாலை 6.40 மணிக்கு புறப்பட்ட லோக்மான்யா திலக் -சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் (12613) ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். நேற்று இரவு 11.45 மணிக்கு புறப்பட்ட மங்களூரு சென்டிரல் - சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் (22638) திருவள்ளூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

இன்று இரவு 8.50 மணிக்கு புறப்படும், சென்னை சென்டிரல் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (22639), சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும்.

நேற்று மாலை 4.45 மணிக்கு புறப்பட்ட இந்தூர் கொச்சுவேலி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் (22645), கொருக்குபேட்டை, பெரம்பூர் வழியாக செல்லும். இந்த ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு செல்லாது.

அதேபோல, நேற்று முன்தினம் (அக். 13ம் தேதி) காலை 11.35 மணிக்கு புறப்பட்ட தான்பாத் -ஆலப்புழா எக்ஸ்பிரஸ் (13351), கொருக்குபேட்டை, பெரம்பூர் வழியாக செல்லும். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் கிடையாது. பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இந்த ரெயில் நின்று செல்லும்.

இன்று இரவு 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்டிரல் - திருவனந்தபுரம் மெயில் (12623), சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 8 மணிக்கு புறப்படும்.

இன்று இரவு 9.05 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்டிரல் - மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் (12671), சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு பதிலாக ஆவடியிலிருந்து இன்றிரவு 9.30 மணிக்கு புறப்படும்.

இன்று இரவு 9.40 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்டிரல்-பாலக்காடு எக்ஸ்பிரஸ் (22651), சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு பதிலாக ஆவடியிலிருந்து இன்றிரவு 10.15 மணிக்கு புறப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்