அதிமுகவை பாஜக அடிபணிய வைத்துள்ளது: முத்தரசன் விமர்சனம்
பாஜக தமிழகத்திற்கு எதிரான கட்சி என்று முத்தரசன் கூறினார்.;

திருவாரூர்,
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தார். கடந்த மாதம் 25-ந் தேதி டெல்லியில் அதிமுக அலுவலகத்தை பார்வையிட சென்றதாக கூறி மத்திய மந்திரி அமித்ஷாவிடம் 2½ மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து செங்கோட்டையன், தம்பித்துரை, சி.வி. சண்முகம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து மிரட்டி, உருட்டி அடிபணிய வைத்து தற்போது பாஜக-அதிமுக இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனை அதிமுக தொண்டர்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில், பாஜக தமிழகத்திற்கு எதிரான கட்சி. எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது மகன் மற்றும் உறவினர் மீதும் உள்ள வழக்குகள், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு போன்ற நெருக்கடியை பயன்படுத்தி அதிமுகவை பாஜக அடிபணிய வைத்துள்ளது. இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. இதனால் தமிழகத்தில் எந்த மாற்றமும் நடக்கப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.