ஓட்டுநர் , நடத்துநர் பணிகளுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் - வெளியான முக்கிய அறிவிப்பு
அரசு போக்குவரத்து கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.;

சென்னை,
அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை உள்ளிட்ட 8 போக்குவரத்து மண்டலங்களுக்கு உட்பட்ட 25 பகுதிகளில், காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக, கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப்பணியிடங்களும், சேலம் மண்டலத்தில் 486 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதேபோன்று, சென்னையில் 364 பணியிடங்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 362 பணியிடங்களும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மண்டலத்தைப் பொறுத்தவரை 344 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களும், மதுரை மண்டலத்தில் 322 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, விழுப்புரம் மண்டலத்தில் 322 பேரும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தகுதி கொண்ட இப்பணியிடங்களுக்கு நாளை பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ( www.arasubus.tn.gov.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எழுத்துத்தேர்வு, செய்முறை மற்றும் நேர்காணல் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது