சட்டசபையில் எதிரொலித்த அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.;

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட தொடங்கி விட்டன. இந்த நிலையில், தமிழ்நாடு அரசியலில் திடீர் திருப்பமாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய மந்திரி அமித்ஷாவை நேற்று இரவு சந்தித்து பேசினார். இதன் மூலம் மீண்டும் அதிமுக-பாஜக இடையே கூட்டணி ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில், அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு சட்டசபையிலும் எதிரொலித்தது. அதிமுக உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.
அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜு: அதிமுக என்ற கட்சியே கணக்கு கேட்டதால்தான் ஆரம்பிக்கப்பட்டது. 2026ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து, எங்கள் கணக்கை தொடங்குவோம்"
அமைச்சர் தங்கம் தென்னரசு: நீங்கள் சொல்வது சரிதான்... கணக்கு கேட்டு ஆரம்பித்த அதிமுக, இப்போது தப்புக் கணக்குதான் போடுகிறது."
அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போட்ட கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டி கழித்து பார்த்தால் கணக்கு சரியாக இருக்கும்.
அமைச்சர் ஐ.பெரியசாமி: அண்ணாவையும் மறந்து விட்டீர்கள்.. அம்மாவையும் (ஜெயலலிதா) மறந்துவிட்டீர்கள்.
அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி: எங்களை எல்லாம் ஆளாக்கிய அம்மாவை என்றைக்கும் மறக்க மாட்டோம். இவ்வாறு விவாதம் நடந்தது.