தமிழகத்தில் மேலும் 5 புதிய மாவட்டங்கள் உருவாகிறதா? - தமிழக அரசு விளக்கம்
தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.;

கோப்புப்படம்
சென்னை,
தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்ட 38 வருவாய் மாவட்டங்கள் உள்ளன. இந்த நிலையில், கும்பகோணம், பொள்ளாச்சி, விருத்தாசலம், ஆத்தூர் மற்றும் செய்யாறு ஆகிய 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், வருகிற குடியரசு தினத்தன்று இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதனை தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டில் கும்பகோணம், பொள்ளாச்சி, விருத்தாசலம், ஆத்தூர், செய்யாறு ஆகிய 5 புதிய மாவட்டங்களை உருவாக்குவது தொடர்பாக குடியரசு தினத்தன்று அறிவிப்பு வெளியாகவுள்ளது" என்று ஒரு நாளிதழின் புகைப்படம் வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இது முற்றிலும் பொய்யான தகவல். இந்தப் புகைப்படம் பல மாதங்களாகப் பகிரப்பட்டு வருகிறது. இது போன்ற எந்த அறிவிப்பும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்படவில்லை" என்று தெரிவித்துள்ளது.