பள்ளிகள் திறந்து ஒன்றரை மாதமாகியும் சீருடை, காலணிகள் வழங்குவதில் தாமதம் ஏன்..? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

இலவச சீருடைகள், காலணி போன்றவை அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2024-07-24 18:20 GMT

கோப்புப்படம்

சென்னை,

நடப்பு கல்வியாண்டில் (2024-25) பள்ளிகள் திறக்கப்பட்டு ஒன்றரை மாதம் ஆகிவிட்ட நிலையில், இலவச சீருடைகள், காலணி போன்ற பொருட்கள் சில அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறுகையில், "பள்ளிகள் திறக்கப்பட்டதும் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், புவியியல் வரைபடம், கிரையான்கள் வழங்கப்பட்டுள்ளன. இலவச சைக்கிள் வழங்கும் பணியும் கடந்த வாரம் முதல் தொடங்கப்பட்டு இருக்கிறது.

சீருடைகள், காலணிகள் வழங்கும் விவகாரத்தில் மாணவர்களின் சரியான அளவுகளை கணக்கெடுத்து அதற்கேற்ப கொள்முதல் செய்யும் பணிகள் நடப்பாண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு இருப்பதால், சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதில் சீருடை தயாரிப்பு பணிகள் முடிவடைந்து மாணவர்களுக்கு வருகிற 29-ந்தேதி முதல் பள்ளிகளிலேயே வினியோகம் செய்யப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மூலமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. இடையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் இருந்ததாலும் தாமதம் ஏற்பட்டது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதிக்குள் மாணவர்களுக்கு புத்தகப்பை, காலணி, வண்ண பென்சில்கள் உட்பட இதர இலவச பொருட்களும் படிபடியாக வழங்கப்படும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்