போராட்டத்திற்கு செல்லும் சாம்சங் ஊழியர்களை பாதி வழியிலேயே நிறுத்தி கைது செய்யும் போலீசார்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்தனர்.

Update: 2024-10-10 06:18 GMT

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே 'சாம்சங்' தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடந்த மாதம் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர்களுடனான சுமுக பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசாரை தாக்கியதாக கூறப்படும் 9 பேரை அவர்கள் வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும் நேற்று காலை போராட்டம் நடத்தும் இடத்தில் அமைக்கப்பட்ட பந்தல் மற்றும் நாற்காலிகளை வருவாய் துறைனர் உதவியுடன் போலீசார் அதிரடியாக அகற்றினர். இருப்பினும் ஊழியர்கள் வழக்கம்போல போராட்டம் நடத்தினர்.

போலீசார் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என கூறி அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டம் நடத்திய சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தர்ராஜன் உள்பட 640 ஊழியர்களை போலீசார் கைது செய்து சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 640 ஊழியர்களும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், சுங்குவார்சத்திரத்தில் இன்றும் போராட சென்ற சாம்சங் ஊழியர்களை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்து வருகின்றனர். டிரைவிங் லைசென்ஸ், ஐடி கார்டுகளை சோதனை செய்து ஊழியர்களை கைது செய்கின்றனர். கைது செய்யப்படும் சாம்சங் ஊழியர்கள், அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறுமாங்காடு, எச்சூர், குன்னம் ஜங்ஷன்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்