தமிழ்ப் புதல்வன் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ,1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Update: 2024-08-09 00:29 GMT

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2022-ல் தொடங்கிவைத்தார். இதுவரை இத்திட்டத்தின்கீழ் 3.28 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி சேரும் மாணவிகளுக்கும் இந்த கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடியாக செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் 3.28 லட்சம் மாணவர்கள் மாதம் ரூ.1,000 பெறுவார்கள். இதற்காக ரூ.360 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்