சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை - சென்னை ஐகோர்ட்டு

சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2024-10-09 09:39 GMT

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் அமைந்துள்ள 'சாம்சங்' நிறுவன தொழிலாளர்கள் 1,200 பேர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

மேலும் போராட்டத் திடல்களில் இருந்த பந்தல்களையும் பிரித்தனர். பந்தல் அகற்றப்பட்ட நிலையிலும் அதே இடத்தில் அமர்ந்து கொட்டும் மழையிலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் 5-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் சொந்த பிணையில் தொழிலாளர்களை போலீசார் உடனடியாக விடுவித்தனர்.

இதனிடையே இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "சாம்சங் தொழிலாளர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்ற அந்நிறுவனம் முன்வந்துள்ளது. மாத ஊதியத்துடன் ஊக்கத்தொகை, அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகளை சாம்சங் ஏற்றுள்ளது. சாம்சங் நிறுவனம் வேறு மாநிலத்திற்கு இடம்மாறுவதாக வெளியாகும் செய்திகள் தவறானவை.

தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தை அரசு அங்கீகரிக்காது என எப்போதும் சொல்லவில்லை. அப்பகுதியில் இயங்கும் பல தொழிற்சாலைகளில் இந்த சங்கத்தை அரசு அங்கீகரித்துள்ளது. இவ்விவகாரத்தில் சாம்சங் நிறுவனம், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அரசு தற்போது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

நீதிமன்றத்தில் உள்ள இவ்விவகாரத்தில், நீதிமன்றம் என்ன முடிவு கூறினாலும் அதனை அரசு செயல்படுத்தும். தொழிலாளர்களின் பல கோரிக்கைகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.அரசியல் கட்சிகள் அனுமதியின்றி போராடினால் எப்போதும்போல காவல்துறை கைது செய்து பின்னர் விடுவிப்பது வாடிக்கையானது. அதே போலதான் போராடிய தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் யாரும் ரிமாண்ட் செய்யப்படவில்லை.

தொழிலாளர்களின் நலனும் முக்கியம்; இளைஞர்களின் வேலைவாய்ப்பு அரசுக்கு முக்கியம். போராடும் தொழிலாளர்களை விரோதமாக பார்க்கவில்லை; அடக்குமுறை நடக்கவில்லை. போராட்டத்தை அரசியலாக பார்க்கவில்லை. சி.ஐ.டி.யு.க்கும் அரசுக்கும் எந்த விரோதமும் இல்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அரசு தயாராக உள்ளது" என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

முன்னதாக சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவசர முறையீடு செய்யப்பட்டது. சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த சூழலில் தொடர் போராட்டத்தில் கைதான தொழிலாளர்கள் யாரும் சட்ட விரோதமாக சிறையில் அடைக்கப்படவில்லை என்று ஐகோர்ட்டில் காவல்துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடையில்லை என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்