தமிழகத்தில் காலாண்டு விடுமுறை இன்று தொடக்கம்

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை இன்று முதல் தொடங்குகிறது.

Update: 2024-09-27 23:02 GMT

சென்னை,

பள்ளிக்கல்வித் துறையின் ஆண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டபடி, கடந்த 19-ந்தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது. முன்னதாக காலாண்டு விடுமுறை 5 நாட்கள் விடப்பட்டு, அக்டோபர் 3-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கையினை ஏற்று, காலாண்டு விடுமுறையை பள்ளிக் கல்வித்துறை நீட்டித்தது.

அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்படுவதாகவும், 7-ந்தேதி (திங்கட்கிழமை) விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகளை திறக்கப்பட உள்ளதாகவும் உத்தரவை பிறப்பித்தது.பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி, 9 நாட்கள் காலாண்டு விடுமுறை இன்று (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது.

மீண்டும் பள்ளிகள் வருகிற 7-ந்தேதி திறக்கப்பட உள்ளது.வழக்கமாக தொடர் விடுமுறை, காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிடும். ஆனால் இதுவரை அதுபோன்ற உத்தரவு வெளியாகவில்லை.

இதனை பயன்படுத்தி சென்னையில் சில பள்ளிகள் இன்று முதல் 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை சில குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை இயக்குனரை தொடர்பு கொண்டபோது, அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்