விஷ சாராய விவகாரம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் நேரில் ஆறுதல்

விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் விஜய் நலம் விசாரித்தார்.

Update: 2024-06-20 13:16 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் விஷ சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 35 ஆக அதிகரித்தது. இன்று பிற்பகல் மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக, தனது எக்ஸ் பக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த விஜய், தற்போது கள்ளக்குறிச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூற சென்றிருக்கிறார். இதில் முதற்கட்டமாக விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் விஜய் நலம் விசாரித்தார். மேலும், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். 

பின்னர் தனது கட்சி நிர்வாகிகளை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மருத்துவ ரீதியாக, பொருளாதார ரீதியாக உதவிகளை வழங்க அறிவுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்