மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்திக்க உள்ளேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அமெரிக்க பயணம் வெற்றிகரமாக அமைந்ததாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Update: 2024-09-14 03:36 GMT

சென்னை,

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். முதல்-அமைச்சரின் இந்த பயணத்தில் மொத்தம் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழக அரசு மற்றும் அந்த நிறுவனங்களுக்கு இடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் முதல் அமைச்சர் பேசியதாவது;

"அமெரிக்க பயணம் வெற்றிகரமாகவும், சாதனை பயணமாகவும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கான சாதனை பயணமாகவும் அமைந்துள்ளது. அமெரிக்காவில் இருந்த 17 நாட்களும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உலகின் தலைசிறந்த 25 நிறுவனங்களை சந்தித்து 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரூ.7,616 கோடி முதலீடு பெறப்பட்டதன் மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்திக்க உள்ளேன்"என்றார்.

அப்போது ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமனிடம் ஓட்டல் அதிபர் பேசியது தொடர்பாகவும், பின்னர் அவர் மன்னிப்பு கேட்டது குறித்தும் முதல் அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து முதல் அமைச்சர் கூறும்போது;

"ஜிஎஸ்டி குறித்த நியாயமான கோரிக்கைகளை ஓட்டல் உரிமையாளர் முன்வைத்தார். அதனை நிதி மந்திரி கையாண்ட விதம் என்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்று. இதனை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி விவகாரம் தொடர்பாக பிரதமரை நேரில் சந்திக்க உள்ளேன்" என்றார்.

 

Tags:    

மேலும் செய்திகள்