பெண் காவலர்கள் மீதான தாக்குதலை ஒடுக்க வேண்டும் - காங். எம்.பி. ஜோதிமணி

காவல்துறை அதிகாரியின் கண்ணியத்தை சீர்குலைப்பதை எளிதாக கடந்துபோய்விட முடியாது என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-18 02:54 GMT

சென்னை,

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஐபிஎஸ் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் தொடர்பான ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க,ஒரு நாகரிமான சமூகம் எவ்விதத்திலும் ஜீரணிக்கமுடியாத கமெண்ட்டுகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.(பொதுவெளியில் பதிவிட முடியாத அளவிற்கு ஆபாசமானவை)

ஒரு பெண்,அவர் காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் அவர் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில், பொதுவெளியில் கொஞ்சமும் வெட்கமோ, பயமோ இல்லாமல் ஆபாசமாகப் பேசுகின்ற துணிச்சல் எப்படி வருகிறது? இதை எப்படி ஒரு நாகரிகமான சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற சமூகம் அனுமதிக்க முடியும்?

அவரது கணவரை இழிவுபடுத்துவதாக நினைத்து, அவர் குடும்பத்துப் பெண்கள் ,குழந்தைகள் மீது ஆபாசத் தாக்குதலை, அச்சுறுத்தலைக் கட்டவிழ்த்து விடுவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு காவல்துறை அதிகாரிக்கும்,அவர் குடும்பத்திற்குமே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை என்ன?

இதுபோன்ற இணைய,சமூக ஊடக,ஆபாசத்தாக்குதலால், எவ்வளவோ பெண்களும், அவர்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறை பெண்களின் மீதான இதுபோன்ற ஆபாசத்தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

ஒரு காவல்துறை அதிகாரியின் கண்ணியத்தையே சீர்குலைப்பது என்பதை எளிதாக கடந்துபோய்விட முடியாது. இது நாளை மற்ற பெண்கள் மீது இன்னும் மோசமாக ஏவப்படும். தமிழ்நாடு காவல்துறை உடனடியாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு சக பெண்ணாக, நாடாளுமன்ற உறுப்பினராக எனது தொகுதியின் காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்களுக்கு எனது அன்பையும், உறுதியான ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்