அத்திக்கடவு - அவினாசி திட்டம்: காணொளி மூலம் தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழக விவசாயிகளின் 65 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Update: 2024-08-17 04:46 GMT

சென்னை,

ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் 65 ஆண்டுகளுக்கும் மேலான கனவாக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இருந்து வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது ரூ.1,916 கோடியே 41 லட்சம் செலவில் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இந்தநிலையில் அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள 31 ஏரிகள், 1,045 குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து நிரப்பப்படும். இதனால் விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுவதோடு 3 மாவட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த திட்டத்தின் மூலமாக 50 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள். அத்திக்கடவு- அவினாசி திட்டம் தொடங்கிவைக்கப்பட்டதன் மூலமாக, விவசாயிகளின் 65 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறியுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்