அதிமுக இணைய எடப்பாடி பழனிசாமி தியாகம் செய்ய தயாரா? - ஓ.பன்னீர் செல்வம் கேள்வி

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பதை தொண்டர்களும், பொதுமக்களும் விரும்பவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-08 04:39 GMT

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

'துரோகம்', 'பொய்மை', 'செய்நன்றி மறத்தல்', 'வன்முறை' ஆகியவற்றின் மொத்த உருவமாக விளங்கும் எடப்பாடி பழனிசாமி என்னை விசுவாசமற்றவன் என்று பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும் எந்த அளவிற்கு விசுவாசமாக இருந்தேன் என்பதை அம்மா அவர்களே பல சந்தர்ப்பங்களில் தெரிவித்து இருக்கிறார்கள்.

என்னுடைய விசுவாசத்திற்கு ஈடாக இராமாயணத்தில் வரும் பரதனை ஒப்பிட்டு பேசிய அம்மா அவர்களின் பேச்சினை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். அம்மா அவர்களே என்னுடைய விசுவாசத்தை இந்த நாட்டிற்கு பறைசாற்றிய நிலையில், அதைப் பற்றி பேச 'பத்துத் தோல்வி' பழனிசாமிக்கு தகுதியில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், பரிந்துரை செய்தவர்க்கு துரோகம், நான்கு ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தவருக்கு துரோகம், என சுயநலத்திற்காக பல துரோகங்களை செய்து கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி என்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர்.

நான் எந்த நேரத்திலும் என்னை கட்சியில் சேர்க்குமாறு கோரிக்கை வைக்காத நிலையில், 'என்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன்' என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தொண்டர்களுக்கான இயக்கம். இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், எந்தக் காலத்திலும் நான் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்கமாட்டேன். எனக்கு அதற்கான அவசியமும் இல்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுபட வேண்டும் என்றுதான் நான் சொல்லி வருகிறேன். கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார். கட்சி இணைய எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் என் கேள்வி.

'நிரந்தரப் பொதுச் செயலாளர்' அம்மா அவர்கள்தான் என்பதையும், சாதாரணத் தொண்டனும் உச்சபட்ச பதவியை அடையலாம் என்ற விதியையும் மாற்றியுள்ள 'சுயநலவாத சர்வாதிகாரி' எடப்பாடி பழனிசாமியிடம் நான் எந்தக் கோரிக்கையும் விடுக்காத நிலையில், என்னைச் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்வது ஆணவத்தின் உச்சகட்டம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நீடிப்பதை தொண்டர்களும், பொதுமக்களும் விரும்பவில்லை. இதனை புரிந்து கொண்டு, தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கழகத்தை பலப்படுத்துவதற்கு 'பத்துத் தோல்வி' பழனிசாமி பதவியிலிருந்து விலகினால் நன்றாக இருக்கும் என்று பொதுமக்களும், தொண்டர்களும் விரும்புகிறார்கள். தாமாக பதவி விலக எடப்பாடி பழனிச்சாமி மறுக்கும்பட்சத்தில், தொண்டர்களும், பொதுமக்களும் இணைந்து அதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள்."

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்