தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3.5 கோடி அபராதம்... 6 மாதம் சிறை தண்டனை

தூத்துக்குடி மீனவர்கள் 10 பேருக்கு ரூ.3.5 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-09-18 08:16 GMT

சென்னை,

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 5-ம் தேதி ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். மன்னார் மேற்கு குதிரைமலை என்ற கடல்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்தனர். மீனவர்களின் விசைப்படகுகளையும்பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் நீதிமன்ற காவல் முடிந்து கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 22 பேரும் கடந்த 3-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி இலங்கை ரூபாயில் அபராதம் விதிக்கப்பட்டது. மீனவர்கள் அபராதத்தை செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் மீதமுள்ள 10 மீனவர்களை,நீதிமன்ற காவலில் வைக்கவும் இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் இலங்கை புத்தளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 10 மீனவர்களில் 3 பேர் உடல்நலக்குறைவு காரணமாக ஆஜராகவில்லை. மீதமுள்ள 7 பேர் ஆஜராகினர். அப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தை சேர்ந்த மீனவர்கள் 10 பேருக்கு ரூ. 3.50 கோடி அபராதமும், 6 மாத சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மீனவர்கள் 7 பேரும் சிறைசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்