காதலனுடன் செல்வதற்காக.. கணவரின் கிட்னியை விற்ற மனைவி
மகளின் கல்வி மற்றும் எதிர்கால செலவுக்கு பணம் தேவை என்று கூறி கணவரை அந்த பெண் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.;

கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரெய்ல் என்ற இடத்தில், பணக் கஷ்டம் மற்றும் மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்கு போதிய பணம் இல்லை என்று கூறி, பெண் ஒருவர் தனது கணவரிடம் அவரது சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளார்.
மனைவி வற்புறுத்தியதால் அவரும் சம்மதித்துள்ளார். ஒரு வருட தேடலுக்குப் பிறகு, மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு 'வாங்குபவரை' கண்டுபிடித்து தனது சிறுநீரகத்தை விற்றார். சிறுநீரகத்தை விற்ற பிறகு, அவர் தனது குடும்பத்தின் நிதி நிலைமை மேம்படும் என்று நம்பி இருந்தார். ஆனால், இந்த முடிவின் பின்னால் தனது மனைவியின் உள்நோக்கம் இருப்பதை அந்த அவர் அறிந்திருக்கவில்லை.
இந்த சூழலில் அவரது மனைவி பாரக்பூரில் உள்ள சுபாஷ் காலனியில் வசிக்கும் ரவிதாஸ் என்பவருடன் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டிருந்தார். தொழில் ரீதியாக ஓவியரான ரவிதாஸ் உடனான பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இந்நிலையில் தனது கணவர் சிறுநீரகத்தை விற்று சம்பாதித்த ரூ. 10 லட்சத்துடன் காதலனுடன் அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக கணவர் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையில், அந்தப் பெண் பாரக்பூரில் ரவி தாஉடன் சேர்ந்து வாழ தொடங்கினார். தகவலறிந்த கணவரின் குடும்பத்தினர், அவரது 10 வயது மகளை அழைத்துக்கொண்டு தம்பதியின் வீட்டுக்கு சென்றனர். ஆனால், ரவியும் அந்த பெண்ணும் கதவை திறக்க மறுத்தனர். நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு கதவை லேசாக திறந்த அந்த பெண், "நீங்கள் செய்ய வேண்டியதை செய்யுங்கள். நான் விவாகரத்து கடிதம் அனுப்புகிறேன்" என பதிலளித்துவிட்டு கதவை அடைத்துள்ளார்.
மாமனார், மாமியார், கணவன், பிள்ளைகள் என அனைவரும் எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்தும் மனைவி வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.