2 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்பு...கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
2 வயது சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பலராமபுரத்தில் வசித்து வந்த தம்பதி ஸ்ரீது- ஸ்ரீஜித். இவர்களுக்கு 2 வயதில் தேவேந்து என்ற மகன் இருந்தான். இன்று காலை வழக்கம்போல தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் திடீரென காணாமல்போனதால் பதற்றமடைந்த பெற்றோர் வீட்டின் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில் சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்களது வீட்டில் உள்ள கிணற்றில் சிறுவனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களால் சிறுவனின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கிணற்றை சுற்றி சுவர் எழுப்பப்பட்டிருந்த நிலையில் சிறுவன் கிணற்றில் விழுந்தது எப்படி? என்பது பற்றி, அவரின் பெற்றோர் மற்றும் மாமாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.