திருப்பதி லட்டு விவகாரம்: சர்ச்சை ஏற்படுத்திய நெய் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது அல்ல

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யானது ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை என்று மத்திய உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2024-10-03 11:40 GMT

திருப்பதி,

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி சோதனை செய்து பார்த்ததில், அந்த நெய்யில் மாட்டுக்கொழுப்பு, பன்றிக்கொழுப்பு இருப்பது தெரியவந்தது. இதனை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பகிரங்கமாக தெரிவித்ததுடன், முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது குற்றச்சாட்டையும் கூறினார்.

சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். இந்த விவகாரம் பக்தர்கள் மற்றும் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த பிரச்சினை தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், "திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யானது தமிழ்நாட்டில் உள்ள ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை" என்று மத்திய உணவு பாதுகாப்புத்துறையின் சோதனையில் தகவல் வெளியாகி உள்ளது. ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் தெலுங்கானாவை சேர்ந்த பிரபல நிறுவனத்தில் இருந்து நெய்யை வாங்கி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது தான் கலப்பட நெய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்திடம் 4 கன்டெய்னர் நெய்யை ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் வாங்கியது தெரியவந்துள்ளதை அடுத்து வைஷ்ணவி நிறுவனத்திற்கு மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

முன்னதாக, திருப்பதி கோவிலுக்கு நாங்கள் அனுப்பிய நெய்யில் எந்த குறைபாடும் இல்லை என்றும் எங்களது தயாரிப்புகளை எடுத்துச் சென்று எங்கு வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்