'ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் நாட்டில் வெறுப்பை பரப்புகின்றன' - ராகுல் காந்தி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் நாட்டில் வெறுப்பை பரப்பி வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Update: 2024-10-03 10:07 GMT

சண்டிகர்,

90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு வருகிற 5-ந்தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 8-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடுகிறது. அதே போல் காங்கிரசுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டு கட்சிகளும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எனவே இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் அரியானாவின் நுஹ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

''நாங்கள் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை யாத்திரை நடத்தினோம். நாங்கள் ஒற்றுமை மற்றும் அன்பு பற்றி பேசி வருகிறோம். ஆனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பா.ஜ.க.வும் வெறுப்பை பரப்பி நாட்டை உடைக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அரசியலமைப்பை அழிக்க நினைக்கிறார்கள்.

காங்கிரஸ் ஒரு கொள்கை ரீதியான போரை எதிர்கொண்டு வருகிறது. இந்த போரில், ஒருபுறம் அரசியலமைப்பை அழிக்க வேண்டும் என்ற கொள்கையும், மறுபுறம் அரசியலமைப்பு சார்ந்த கொள்கையும் இருக்கின்றன. அன்புக்கும், வெறுப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. நாம் வெறுப்பை அழித்தொழிக்க வேண்டும்.

நான் அமெரிக்காவில் அரியானாவைச் சேர்ந்த சில மாணவர்களை சந்தித்தேன். அவர்கள் என்னிடம் அரியானாவில் அவர்களுக்கு வேலை கிடைக்காததால் அமெரிக்காவுக்கு வந்ததாக கூறினார்கள். அரியானாவில் வேலைவாய்ப்பின்மையும், பணவீக்கமும் அதிகரித்துள்ளது. பா.ஜ.க. அரசு அரியானாவை சீரழித்துவிட்டது. பிரதமர் மோடி கோடீஸ்வரர்களுக்கான அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்