குழந்தை பாக்கியம் வேண்டி சடங்கு: முதியவரின் தலையை துண்டித்து உடலை எரித்த மாந்திரீகர்
பீகாரில் குழந்தை பாக்கியம்வேண்டி நடத்தப்பட்ட சடங்கில் முதியவரின் தலை துண்டிக்கப்பட்டு உடல் எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;
பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த யுக்வல் யாதவ் (65) கடந்த வாரம் காணாமல் போனார். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இதற்கிடையே அவர் வசித்து வந்த கிராமத்தில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்தில் யுக்வலின் செருப்புகள் கிடந்தன.
மோப்ப நாய்கள் மூலம் நடத்தப்பட்ட சோதனையில் அவை மாந்திரீகர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றன. அங்கிருந்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், யுக்வலை அவர்கள் கொலை செய்தது தெரிய வந்தது. சுதிர் பாஸ்வான் என்பவர் குழந்தை பாக்கியம்வேண்டி, மாந்திரீகர் ராமாஷிஷ் ரிக்யாசனுடன் சேர்ந்து பூஜை நடத்தினார். ஒரு மனிதரின் தலையைத் துண்டித்து, அவரின் தலையை தீயில் எரித்தால் மட்டுமே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று மாந்திரீகர் கூறியுள்ளார்.
இதனால் அவர்கள் சேர்ந்து யுக்வலை கடத்தி கொலை செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, மற்றுமொரு இளைஞரையும் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கொலையில் ஈடுப்பட்ட சுதிர் பாஸ்வான் மற்றும் மாந்திரீகரின் சீடர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மாந்திரீகர் ராமாஷிஷ் ரிக்யாசனை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.