பஞ்சாப்: காவல் நிலையம் அருகே குண்டு வெடித்ததாக தகவல் - ஒரே வாரத்தில் 2-வது சம்பவம்
பஞ்சாப் மாநிலத்தில் காவல் நிலையம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Image Courtesy : ANI
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பக்ஷிவால் காவல் நிலையம் அருகே நேற்று இரவு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக தகவல் பரவியது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் தடய அறிவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு தீப்பற்றி எரிந்த தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், இது குறித்த ஆய்வு அறிக்கை வெளியான பிறகே முழு விவரங்கள் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், குண்டு வெடித்த சத்தத்தை யாரும் கேட்கவில்லை என்பதால், சம்பந்தப்பட்ட இடத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதே சமயம் இது இந்த வாரத்தில் நடந்த 2-வது சம்பவமாகும். முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமாபாத் காவல் நிலையம் அருகே அதிகாலை 3.15 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது. ஆரம்பத்தில் இது குண்டு வெடிப்பு அல்ல என்று போலீசார் மறுத்தனர். பின்னர் டி.ஜி.பி. கவுரவ் யாதவ் தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தின்போது, "தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தொழில்நுட்ப மற்றும் மனித நுண்ணறிவை பயன்படுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.