'அண்டை நாடுகளை விட இந்தியாவில் பட்டினி கொடுமை அதிகமாக உள்ளது' - அகிலேஷ் யாதவ்

அண்டை நாடுகளை விட இந்தியாவில் பட்டினி கொடுமை அதிகமாக உள்ளது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-20 03:23 GMT

மும்பை,

மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மராட்டிய மாநிலத்தில், வரும் நவம்பர் 20-ந்தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ந்தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் பிரசார பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த தேர்தல், மகாவிகாஸ் அகாடி கூட்டணி மற்றும் மகாயுதி கூட்டணிக்கு இடையிலான இருமுனைப் போட்டியாக அமைய உள்ளது. இதில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், சிவசேனா(உத்தவ் பாலசாகேப் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார் அணி) ஆகியவை அங்கம் வகிக்கின்றன. அதே போல், ஆளும் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க., சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே அணி) மற்றும் தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார் அணி) ஆகிய கட்சிகள் உள்ளன.

இந்நிலையில், மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மராட்டிய மாநிலம் துலே பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது;-

"மராட்டிய மாநிலத்தில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பா.ஜ.க. விரக்தியடைந்துள்ளது. அவர்கள் சத்ரபதி சிவாஜிக்கு சிலை வைப்பதிலும் ஊழல் செய்தனர். மராட்டிய மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

இந்தியாவை உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்றுவோம் என பா.ஜ.க. கூறியது. ஆனால் நமது அண்டை நாடுகள் நம்மை விட நன்றாக செயல்படுகின்றன. அண்டை நாடுகளை விட இந்தியாவில் பட்டினி கொடுமை அதிகமாக உள்ளது."

இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்