கவர்னர் அழைப்பு: இன்று மாலை மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

நில மோசடி வழக்கில் ஜாமீனில் விடுதலையான ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் முதல்-மந்திரியாக இன்று மீண்டும் பதவியேற்க உள்ளார்.

Update: 2024-07-04 09:50 GMT

ராஞ்சி,

ஜார்கண்ட் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவரான இவர் மீது நில மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதில் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் கடந்த ஜனவரி 31-ம்தேதி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

முன்னதாக அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்-மந்திரியானார். சுமார் 5 மாதங்கள் சிறையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு கடந்த 28-ம்தேதி ஜார்கண்ட் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதனால் அவர் சிறையில் இருந்து விடுதலையானார்.

இது கட்சியினருக்கும், கூட்டணி தலைவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையானதால் அவர் மீண்டும் முதல்-மந்திரியாவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சி எம் எல் ஏ க்களின் கூட்டம் நேற்று சம்பாய் சோரன் வீட்டில் நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாகூர், மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மிர் ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக (முதல்-மந்திரி) ஹேமந்த் சோரனை தேர்வு செய்வது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல்-மந்திரி சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் சி பி ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். பின்னர் ஹேமந்த் சோரன், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இந்நிலையில் மீண்டும் ஜார்கண்ட் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் பல்வேறு மந்திரிகளும் பதவியேற்பார்கள் என தெரிகிறது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மட்டுமின்றி கூட்டணி கட்சிகளுக்கும் மந்திரி பதவி வழங்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

முன்னதாக ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழா ஜூலை 7ம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன. 

Tags:    

மேலும் செய்திகள்