தீ விபத்தில் முதிய தம்பதி பலி : மகன் கைது
தீ விபத்தில் முதிய தம்பதி பலியான சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் மகனை போலீசார் கைது செய்தனர்.;

திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சென்னிதலா கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் (வயது 96). இவருடைய மனைவி பாரதி (86). இவர்களது மகன் விஜயன். இந்த தம்பதி வீட்டில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தீ ஏற்பட்டதை ஆட்டோ ஓட்டுநனர் முதலில் கண்டார்.
இந்த விபத்தில் ராகவன் மற்றும் பாரதி இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் தகவல் அறிந்த மன்னார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விஜயன் பெற்றோருடன் சொத்து தகராறில் அடிக்கடி ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் விஜயனை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.