தொகுதி மறுசீரமைப்பு: 1971 மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் -திமுக வலியுறுத்தல்
தொகுதி மறுசீரமைப்புக்கு 1971 மக்கள் தொகையை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக வலியுறுத்தியுள்ளது.;

புதுடெல்லி,
தொகுதி மறுசீரமைப்பு செய்ய மத்தியில் ஆளும் பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால் தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு ஒரு தொகுதி கூட குறையாது என அமித்ஷா பேசியிருந்தார். எனினும், தமிழ்நாட்டுக்கு தொகுதிகள் குறையாமல் வடமாநிலங்களுக்கு தொகுதிகள் அதிகரித்தால், அதுவும் அநீதியே என திமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வருகின்றன. இதனிடையே, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல் மந்திரிகள் மற்றும் கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் இருந்து 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பை 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது. மாநிலங்களவையில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பிய திமுக எம்.பி சண்முகம் கூறியதாவது: - மக்களவையின் பலம் அதிகரிக்கப்பட்டால் பங்களிப்பு உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ளும் விகிதாச்சார அடிப்படையில் இதை மேற்கொள்ள வேண்டும். மக்களவை தொகுதிகளை நிர்ணயிக்கும் மக்கள் தொகை எண்ணிக்கை என்பது குறைந்தபட்சம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு 1971 கணக்கெடுப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும். மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தென் மாநிலங்களை மத்திய அரசு தண்டிக்கிறது" என்றார்.