ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு பிப்ரவரி 11-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கின் விசாரணை வரும் பிப்ரவரி 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.;

லக்னோ,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது அவதூறான கருத்துகளை பேசியதாக குற்றம்சாட்டி, உத்தர பிரதேசத்தின் ஹனுமன்கஞ்ச் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர் கடந்த 2018-ம் ஆண்டு சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராக தவறியதை தொடர்ந்து, கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராகுல் காந்தி கோர்ட்டில் சரணடைந்தார். தொடர்ந்து கடந்த ஜூலை 26-ந்தேதி ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார்.
அவருக்கு தலா ரூ.25,000 மதிப்புள்ள இரண்டு பிணைகளின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தனக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிபதி சுபம் வர்மா தலைமையிலான அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கோர்ட்டு விசாரணை நடைமுறைகளில் பங்கேற்க இயலாது என்று தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.