அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயர் பரிந்துரை

தற்போதைய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பதவிக்காலம் நவ.10ல் நிறைவடைகிறது.

Update: 2024-10-17 05:08 GMT

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார். இவரது பதவி காலம் வரும் நவ.10-ம் தேதி நிறைவடைய உள்ளது. இதையடுத்து அடுத்த  தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பெயரை சந்திரசூட் நேற்று பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை அரசு ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், சுப்ரீம் கோர்ட்டின் 51-வது நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா பொறுப்பேற்பார்.

சஞ்சீவ் கண்ணா, கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி 2019-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

வரும் நவ.10-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று இப்பதவியில் 2025ம் ஆண்டு மே மாதம் வரை இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. 51 வது நீதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் சஞ்சீவ் கண்ணா கிட்டத்தட்ட 6 மாதங்கள் தலைமை நீதிபதி பொறுப்பை வகிப்பார்.

யார் இந்த சஞ்சீவ் கண்ணா?:

கடந்த 1960 -ம் ஆண்டு டெல்லியில் பிறந்த சஞ்சீவ் கண்னா, டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். இவரது தந்தை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக 1985-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவரது தாயார் சரோஜ் கண்ணா, இந்தி பேராசிரியராக டெல்லி ஸ்ரீராம் கல்லூரியில் பணியாற்றினார். 1983-ம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கண்ணா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்.

வருமான வரித்துறையின் மூத்த வழக்கறிஞராக நீண்ட காலம் பணியாற்றி உள்ளார். கடந்த 2004-ம் ஆண்டு டெல்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார். டெல்லி ஐகோர்ட்டில் பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் அவர் ஆஜராகியிருக்கிறார். டெல்லி ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005 ஆம் ஆண்டு சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். எந்த ஒரு நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்காமல், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார் சஞ்சீவ் கண்ணா. இதற்கு முன்பாக ஒரு சில நீதிபதிகளே இப்படி பொறுப்பை வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்