சண்டிகர் மேயர் தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி
சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.;

சண்டிகர்,
சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட பாஜகவின் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா, 19 வாக்குகளை பெற்று 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் பிரேம் லதா 17 வாக்குகள் பெற்றார்.
35 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் மாநகராட்சியில், ஆம் ஆத்மி கட்சிக்கு 13 கவுன்சிலர்களும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 6 கவுன்சிலர்களும் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 16 கவுன்சிலர்கள் உள்ளனர்.
மேலும், மாநகராட்சியின் அலுவல் ரீதியான உறுப்பினர் என்ற அடிப்படையில் சண்டிகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரிக்கும் மேயர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. இத்தகைய சூழலில், பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதன் மூலம், சிலர் மாற்றி வாக்களித்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.
மேயர் தேர்தலுக்கு பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஜெய்ஸ்ரீ தாக்கூரை தேர்தல் பார்வையாளராக சுப்ரீம் கோர்ட்டு நியமித்திருந்தது. மேயர் தேர்தலை தொடர்ந்து அடுத்ததாக மூத்த துணை மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.