ஒரே நாளில் 25-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இந்திய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான 25-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-25 12:57 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் ஆங்காங்கே விமானங்களில் வெடிகுண்டு வைத்து உள்ளதாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் புறப்பட வேண்டிய விமானங்கள் விமான நிலையங்களிலேயே நிறுத்தப்படுவது, பறந்து செல்லும் விமானங்கள் திட்டமிடப்படாத விமான நிலையங்களில் தரையிறக்கப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறுகின்றன. விமானங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வெடிகுண்டு வைக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்ட பின்னர் விமானங்கள புறப்பட்டுச் செல்கின்றன.

இதுபோன்ற போலி வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் இன்று இந்திய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான 25 உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ்ஜெட் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான தலா 7 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 நாட்களில் இந்திய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 275 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான மிரட்டல்கள் சமூக வலைதளங்கள் மூலம் வந்துள்ளன. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் கணக்குகளின் விவரங்களை கண்டறிந்து, இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்