பல முறை மிரட்டி பலாத்காரம்: காதலனை கைது செய்து எனக்கு மணம் முடித்து வையுங்கள் - இளம்பெண் தர்ணா

தனது காதலியை அவ்வப்போது மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

Update: 2024-06-08 02:31 GMT

கொப்பல்,

இருவீட்டாரும் சம்மதித்த நிலையில் காதலியை மிரட்டி காதலனே பலாத்காரம் செய்தார். இதனால் அவரை கைது செய்து தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா கரட்டகி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சோந்தவர் ரவிராஜ். இவர் யூ-டியூப் பிரபலம் ஆவார். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் 2020-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த பெண் பி.யூ.சி. படித்து வந்தார். இதையடுத்து இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் காதலிக்க தொடங்கினர்.

இதுகுறித்து 2 பேரின் குடும்பங்களுக்கும் தெரியவந்தது. அப்போது காதலை கைவிடும்படி அவர்கள் கூறினர். ஆனால் காதல் ஜோடி அதை கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி திருமணத்திற்கான ஏற்பாடுகளை தொடங்கினர். இதற்கிடையே கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந் தேதி ரவிராஜ், இளம்பெண் வீட்டிற்கு சென்றார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த தனது காதலியை அவர் பலாத்காரம் செய்தார். பின்னர் அதனை வீடியோ எடுத்தும் வைத்து கொண்டார். இதையடுத்து தனது காதலியை அவ்வப்போது மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதனால் இளம்பெண் கர்ப்பமடைந்தார். அதனை ரவிராஜ் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்தார். மேலும் இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த இளம்பெண் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை மீட்டு சிகிச்சை அளித்து குடும்பத்தினர் காப்பாற்றி உள்ளனர். இதற்கிடையே தொடர்ந்து இளம்பெண்ணை மிரட்டி ரவிராஜ் பல முறை பலாத்காரம் செய்து வந்துள்ளார். மேலும் திருமணத்திற்கும் மறுத்துள்ளார்.

இந்த நிலையில் கொப்பல் டவுன் போலீசில் இளம்பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை ரவிராஜ் பலாத்காரம் செய்ததாக கூறி இருந்தார். ஆனால் வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்த காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இளம்பெண், கொப்பல் டவுன் போலீஸ் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். அப்போது ரவிராஜை கைது செய்து தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி உள்ளார். இதனால் போலீஸ் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்