நடிகர் மனோஜ் குமார் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்
உயிரிழந்த மனோஜ் குமாருக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர் , எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர் மனோஜ் குமார்(87) . இவர் தேசபற்றுமிக்க படங்களில் அதிகமாக நடித்திருப்பதால் 'பாரத் குமார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவரின் 'புரப் அவுர் பஸ்சிம்' படம் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. யாத்கார், பெஹ்சான், மேரா நாம் ஜோக்கர் உள்ளிட்டவைகள் இவரின் சிறந்த படங்களாகும்.
இவ்வாறு தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் கடந்த 1992-ல் பத்மஸ்ரீ விருதையும், 2015-ல் இந்திய சினிமா துறையில் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றார். இதற்கிடையில், உடல்நல குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்றுவந்தநிலையில், இன்று அதிகாலை 4.03 மணியளவில் மனோஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் உயிரிழந்த மனோஜ் குமாருக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
புகழ்பெற்ற நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஸ்ரீ மனோஜ் குமார் ஜியின் மறைவால் மிகவும் வருத்தமடைந்தேன். இந்திய சினிமாவின் ஒரு சின்னமாக அவர் இருந்தார், குறிப்பாக அவரது தேசபக்தி ஆர்வத்திற்காக நினைவுகூரப்பட்டார், அது அவரது படங்களிலும் பிரதிபலித்தது. மனோஜ் ஜியின் படைப்புகள் தேசிய பெருமையின் உணர்வைத் தூண்டின, மேலும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.