சர்க்கரை நோயாளிகள் தர்பூசணி ஜூஸ் குடிக்கலாமா?

தர்பூசணியில் உள்ள அதிகமான நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு ஜீரண ஆற்றலையும் அதிகரிக்க செய்கிறது.;

Update:2025-02-25 13:18 IST

கோடைகாலத்தில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து பெறுவதற்கு தர்பூசணி ஒரு மிகச்சிறந்த பழமாக திகழ்கிறது. தர்பூசணியில் 90 சதவிகிதத்திற்கு மேல் நீர்ச்சத்து நிறைந்து இருக்கிறது. ஒரு கப் தர்பூசணியில் 11 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது. இது சற்று குறைந்த அளவு என்றாலும் இதனுடைய சர்க்கரை உயர்த்தல் குறியீடு (கிளைசீமிக் இன்டக்ஸ்) 72 ஆகும். இது அதிகமான கிளைசீமிக் இன்டக்ஸ் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை மிக குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

தர்பூசணியில் வைட்டமின் சி, ஏ, பி6 போன்ற ஊட்டச்சத்துக்களும் பொட்டாசியம், மெக்னீசியம், ஃபோலேட், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், போன்ற தாதுக்களும் அதிகமாக உள்ளன. மேலும் லைக்கோபின் மற்றும் சிட்ருலின் போன்ற ஆன்ட்டிஆக்சிடென்ட்ஸ் இருக்கின்றன. இது ரத்த நாளங்களில் அழற்சி ஏற்படாமல் பாதுகாத்து, ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுவதோடு இருதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தகிறது.

தர்பூசணியில் உள்ள அதிகமான நார்ச்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு ஜீரண ஆற்றலையும் அதிகரிக்க செய்கிறது. இதில் நீர்ச் சத்து அதிகமாக இருப்பதால் தோல் வறட்சி ஏற்படாமல் தடுத்து அரிப்பு மற்றும் தோல் சம்பபந்தபட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவுகிறது. தர்பூசணியில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் சிட்ருலின் தசை பிடிப்பு மற்றும் தசை வீக்கத்தை குறைக்க உதவுகிறது.

தர்பூசணியை உணவுக்கு பின் சாப்பிடுவதை விட இடைப்பட்ட உணவாக (ஸ்னாக்ஸ்) உட்கொள்வது நல்லது. சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு 150 கிராம் மிகாமல் தர்பூசணி உட்கொள்ளலாம். பொதுவாக பழங்களை இயற்கையாக உண்பது, ஜூஸ் வடிவில் குடிப்பதை விட நல்லது. ஏனெனில் மிக்ஸியில் பழங்களை அரைத்து ஜூஸ் தயாரிக்கும்போது, அதில் உள்ள வைட்டமின்கள் ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள் அழிந்து விடுவதால் பழங்களில் உள்ள நன்மைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு கிடைக்காமல் போய்விடும்.

 

Tags:    

மேலும் செய்திகள்