கத்தாரில் திறந்தவெளி பஸ்சில் அர்ஜென்டினா அணி ஊர்வலம்
உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் திறந்த வெளி பஸ்சில் ஏறி ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.;

image courtesy: screenshot from twitter video
கத்தார்,
கத்தாரில் நேற்று முன்தினம் இரவு நடந்த 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா அணி 3-வது முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.
பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தது. தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா அணி 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை உச்சி முகர்ந்தது.
இந்த நிலையில் உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணியினர் வெற்றியை கொண்டாட இறுதிப்போட்டி நடைபெற்ற லுசைல் ஸ்டேடியத்தின் வெளியே திறந்த வெளி பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அணியின் சீருடையுடன் பஸ்சில் ஏறிய அர்ஜென்டினா அணி வீரர்கள் ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அங்குள்ள ரோட்டில் இருபுறமும் திரண்ட ரசிகர்கள் வீரர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்தனர்.