நடப்பு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவ.15-ந் தேதி திறப்பு

நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-10-24 21:57 GMT

சபரிமலை,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனில் நடை திறப்பு மற்றும் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும் தேதி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

2024-ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள், தந்திரி முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்கிறார்கள். மறுநாள் (16-ந் தேதி) முதல் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள். டிசம்பர் மாதம் 26-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. அன்று இரவு நடை சாத்தப்படும்.

மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் மாதம் 30-ந் தேதி நடை திறக்கப்படும். நடப்பு சீசனின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 14-ந் தேதி நடைபெறும். தொடர்ந்து 20-ந் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை அடைக்கப்படும்.

மேற்கண்ட தகவலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்