திருப்பதி கோவிலில் கருட சேவை - லட்சக்காணக்கான பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-10-08 17:10 GMT

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இந்த பிரம்மோற்ச விழாவின்போது தினமும் காலை, இரவில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிகள் மாடவீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

5ஆம் நாளான இன்று காலை மோகினி அவதாரத்தில் காட்சியளித்த உற்சவர் மலையப்ப சுவாமி, மாலை தங்க கருட வாகனத்தில் உலா வந்தார். இந்த கருட சேவையின்போது மாட வீதிகளில் லட்சக்கணக்கானோர் திரண்டிருந்து கோவிந்தா கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.

கருடசேவையைக் காண நான்கு மாடவீதிகளில் 28 பிரமாண்டமான ஒளித்திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் அருங்காட்சியகம், வராக சாமி தங்கும் விடுதி, அன்னதானக்கூட வளாகம், ராம்பகீச்சா தங்கும் விடுதி, பில்டர் ஹவுஸ் ஆகிய இடங்களில் அகண்ட ஒளித்திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கருட சேவை நிகழ்வையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக 80 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

 பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளுவது என்பது விசேஷமானது. பெருமாளின் முழு அருளை பெற்றவர் கருடன் என்பதால் அவர் மீது பெருமாள் உலா வருவது மிகவும் சிறப்பானது. இந்த கருட சேவை உற்சவம் தொடங்கியது திருமலை திருப்பதியில்தான். அதன் பின்னர்தான் மற்ற பெருமாள் கோயில்களில் பெருமாளுக்கு கருட சேவை உற்சவம் நடத்தப்படுகிறது.

 

 

Tags:    

மேலும் செய்திகள்