பக்தர்களை காத்தருளும் பக்த ஆஞ்சநேயர்
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கும் கல்பாக்கத்திற்கு இடையில் அமைந்துள்ள மேல்பெருமாள்சேரியில் பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.;
தலைசிறந்த ராம பக்தனான ஆஞ்சநேயர், தன்னை மனப்பூர்வமாக வழிபடுபவர்களை உடனிருந்து காப்பார். தமிழ்நாட்டில் கோவில்களில் அமைந்துள்ள ஆஞ்சநேயர், பொதுவாக பக்த ஆஞ்சநேயர், வீர ஆஞ்சநேயர், பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் சஞ்சீவி ஆஞ்சநேயர் போன்ற திருக்கோலங்களில் காட்சி தருவார். செங்கல்பட்டில் கணையாழி ஆஞ்சநேயர்' என்ற பெயரிலும், காஞ்சியில் 'சதுர்புஜ ஆஞ்சநேயர்' என்ற பெயரிலும் கோவில் கொண்டு அருளாசி வழங்குகிறார்.
அந்த வகையில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்திற்கும் கல்பாக்கத்திற்கும் இடையில் அமைந்துள்ள மேல்பெருமாள்சேரி என்ற கிராமத்தில் 'பக்த ஆஞ்சநேயர்' என்ற திருநாமம் தாங்கி தன்னை நாடி வரும் பக்தர்களைக் காத்தருள்கிறார்.
இவ்வாலய கருவறையில் இருக்கும் பக்த ஆஞ்சநேயர், தனக்கு எதிரே இருக்கும் ராமபிரானின் பாதத்தை தரிசித்த நிலையில் நின்று கிழக்கு திசை நோக்கி அருள்மழை பொழிகிறார்.
இந்த சிறிய கோவிலுக்கு வெளிப்புறத்தில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுமார் 27 அடி உயரத்தில் மிகப்பெரிய ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் விஸ்வரூப தரிசனம் தந்து காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறார்.
இந்த ஆலயத்தின் கருவறையின் வெளிப்புறத்தில் விநாயகப் பெருமான் 'நீதி வழங்கும் விநாயகர்' என்ற திருநாமம் தாங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த திருக்கோவிலில் தட்சிணாமூர்த்தி தம்பதி சமேதராக தெற்கு திசையில் அமர்ந்து அருள்புரிவது தனிப் பெரும் சிறப்பாகும். யோக ஆஞ்சநேயர் வடக்கு திசை நோக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். யோகத்தினால் தன்னையும், பிறரையும் தன்வசப்படுத்த முடியும் என்பதை பக்தர்களுக்கு உணர்த்த யோக ஆஞ்சநேயராக இங்கே எழுந்தருளியுள்ளார். வாழ்வில் வெற்றிபெற குருவின் அருளாசி ஒவ்வொருவருக்கும் தேவை என்பதை உணர்த்த, குரு பகவானின் பின்புறம் இவர் தியானத்தில் மூழ்கியபடி இருக்கிறார்.
கருவறையின் முன்பாக உள்ள மண்டபத்தின் முகப்பில், சங்கு, சக்கரமும், நடுவில் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரின் சுதைச் சிற்பங்களும் காணப்படுகின்றன. விநாயகப்பெருமான் மற்றும் ஆஞ்சநேயர் இருவரை மட்டும் சனீஸ்வரரால் பிடிக்க இயலவில்லை. இதைக் கருத்தில் கொண்டு இந்த சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன் மண்டபத்தின் ஒரு பக்கத்தில் ராமர், சீதாபிராட்டி, லட்சுமணர் ஆகிய மூவரும் நின்ற திருக்கோலத்தில் இருக்க, அவர்களை வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் இருக்கும் சுதைச்சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கருவறை விமானத்தின் மூன்று புறங்களிலும் ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் சுதைச்சிற்பமாக காட்சி அளிக்கிறார்.
ராமேசுவரத்தில் உள்ளது போலவே இந்தக் கோவிலில் மிதக்கும் கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இவ்வாலயத்தின் தல விருட்சம், அரசமரம் ஆகும்.
இவ்வாலயத்தில் வருடந்தோறும் மார்கழி மாதத்தில் வரும் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.