'இதனால்தான் 'தி டெஸ்ட்' படத்தை ஓடிடியில் வெளியிடுகிறோம்' - இயக்குனர் விளக்கம்
’தி டெஸ்ட்’படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கான காரணத்தை இயக்குனர் பகிர்ந்துள்ளார்.;

சென்னை,
தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, ஜகமே தந்திரம், மண்டேலா' உள்ளிட்ட படங்களை தயாரித்த சசிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். 'டெஸ்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், நயன்தாரா , மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான் 'டெஸ்ட்' திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் வருகிற ஏப்ரல் 4-ம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கான காரணத்தை இயக்குனர் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், 'திரைப்படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில்தான் தயாரிப்பாளரானேன். 12 வருடங்களுக்கு முன்பே 'தி டெஸ்ட்' கதையை எழுதினேன். இப்போதுதான் இயக்க முடிந்தது.
சித்தார்த் மற்றும் ரஞ்சி போட்டிகளில் விளையாடிய 22 நிஜ கிரிக்கெட் வீரர்கள் நடித்துள்ளனர். ஒரேநாளில் பல கோடி ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஓடிடி தளத்தில் வெளியிடுகிறோம்' என்றார்.