2025ல் ஜனநாயக தீபத்தை ஏற்ற வருகிறார் - 'தளபதி 69' அப்டேட்

ஜனநாயக தீபத்தை ஏற்றுபவர் 2025 ம் ஆண்டு வருகிறார் என தளபதி 69 குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Update: 2024-09-14 11:45 GMT

சென்னை,

நடிகர் விஜய் 'தி கோட்' படத்தை தொடர்ந்து தனது 69-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார்.

'தளபதி 69' படத்தை அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்க உள்ளார். மேலும் மோகன்லால், சமந்தா, சிம்ரன், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது, இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கே.வி.என் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி தற்போது அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தீப்பந்தத்தை ஏந்தியபடி இருக்கும் போஸ்டரை பகிர்ந்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கையில் தீப்பந்தம் ஏந்தியபடி இருக்கும் போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட டுவிட்டர் பக்கத்தில், தமிழில் எங்கள் முதல் திரைப்படம் தளபதி 69 எச்.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியாக உள்ளது என்பதை தெரிவிப்பதில் பெருமையடைகிறோம். தளபதி விஜய் உடன் கைகோர்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.  ஜனநாயக தீபத்தை ஏற்றுபவர் 2025 அக்டோபரில் வருகிறார்' என பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்