இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சிவகுமார், சூர்யா
லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இளையராஜாவுக்கு சிவகுமார் தங்க சங்கிலியை பரிசாக அணிவித்தார்.;

சென்னை,
1976-ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 10,000-க்கு அதிகமான பாடல்களை உருவாக்கி உள்ளார்.
இவர் கடந்த மார்ச் 8-ந் தேதி லண்டனில் 'வேலியண்ட்' (Valiant) சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார். இந்தியாவிற்கே பெருமை பெற்றுத்தந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. அந்த வகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி, திரைபிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
இந்தநிலையில், நடிகர் சிவக்குமார், தனது மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தாவுடன் இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவருக்கு வாழ்த்து கூறினார்கள். இந்த சந்திப்பின் போது சிவகுமார் தங்க சங்கிலியை இளையராஜாவிற்கு பரிசாக அணிவித்தார். மேலும், சூர்யாவும் பிருந்தாவும் இளையராஜாவிற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள்.
