பாலியல் புகாரை நிரூபித்தால் கணவரை விட்டு விலக தயார்- ஜானி மாஸ்டர் மனைவி

பாலியல் தொல்லைக்கு ஆளானால் புகாரளித்த பெண் ஏன் அவரிடம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்று ஜானி மாஸ்டர் மனைவி ஆயிஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-09-20 09:27 GMT

சிறந்த நடன இயக்குநராக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் அறிவிக்கப்பட்டார். இவர் தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடலின் மூலம் கவனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து, ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா ஆகிய ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருந்தார்.

இந்த நிலையில் ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருக்கும் இளம்பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது விசாரித்த காவல்துறை நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது .மேலும் தன்னுடைய 16 வயதில் ஜானி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த இளம்பெண் தெரிவித்து இருந்ததால் ஜானி மாஸ்டர் மீது போக்சோ சட்டத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஜானி மாஸ்டரின் மனைவி சுமலதா என்கிற ஆயிஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பாலியல் புகார் அளித்த பெண் சிறுமியாக இருந்த போது மேடை நிகழ்ச்சிகளில் நடனமாடி வந்தார். அப்போது சினிமா துறையை பார்த்து சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார். பின்னர் ஜானி மாஸ்டரிடம் வேலைக்கு சேர்ந்து உதவி நடன இயக்குநராக வேலை பார்த்து வந்தார். ஐதராபாத்தில் உள்ள திரைப்பட அசோசியேஷனில் உறுப்பினராக பணம் கட்டக் கூட முடியவில்லை. அவருக்கு எனது கணவர் ஜானி மாஸ்டர் பண உதவி செய்தார். அப்போது பெண் உதவி நடன இயக்குநர் தான் சிறந்த நடன அமைப்பாளராக ஆக வேண்டும் அல்லது சிறந்த கதாநாயகியாக ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். இதனால் ஜானி மாஸ்டர் தன்னுடைய பட வாய்ப்புகளில் அந்த பெண்ணுக்கு வாய்ப்புகளை வழங்கி வந்தார். இப்போது அவர் மீது பாலியல் புகார் கூறுகிறார். மைனர் பெண்ணாக இருந்தபோது மும்பையில் நடந்த சம்பவத்திற்கு என்ன ஆதாரம் உள்ளது. அவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதை யாராவது பார்த்தீர்களா? ஏன் அப்போதே வெளியில் சொல்லவில்லை. பாலியல் தொல்லைக்கு ஆளானால் ஏன் அவரிடம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். அப்படியானால் ஜானி மாஸ்டரிடம் வேலை செய்வது அதிர்ஷ்டம் என கூறினார். பலாத்காரம் செய்ததை நிரூபித்தால் நான் எனது கணவரை விட்டு விலக தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பாலியல் புகார் எழுந்த நிலையில் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் தெலுங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஆந்திர மாநிலத்தின் துணை முதல்-மந்திரியான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்