பாலியல் வழக்கு: சிறப்பு விசாரணைக் குழுவிடம் பதிலளித்த மலையாள நடிகர் ஜெயசூர்யா!

தன் மீது பொய்யான வழக்கு புனையப்பட்டுள்ளதாக மலையாள நடிகர் ஜெயசூர்யா பாலியல் புகார் தொடர்பான விசாரணையின்போது காவல் துறையிடம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-15 14:52 GMT

திருவனந்தபுரம்,

ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

இதில் மலையாள நடிகர் ஜெயசூர்யாவும் சிக்கியுள்ளார். ஒரு நடிகை, நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார். நடிகை மினு முனீர், சோனியா மல்ஹார் ஆகியோர் நடிகர் ஜெயசூர்யா, தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்கள். இது, ஜெயசூர்யா ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த புகாரின் பேரில் அவர் மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதியப்பட்டுள்ளதால், நடிகர் ஜெயசூர்யாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிறப்பு விசாரணைக் குழுவின் முன்பு ஆஜராகி தன் மீதான பாலியல் குற்றவழக்கு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார் நடிகர் ஜெயசூர்யா. இன்று திருவனந்தபுரத்தில் உள்ள கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. .

இந்த விசாரணையில் நடிகர் ஜெயசூர்யா காவல் துறையினரிடம் "என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் மறுக்கிறேன். என் மீதான பாலியல் புகார் முற்றிலும் புனையப்பட்டது. எனக்கு முன்ஜாமீன் கூட தேவையில்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று நிரூபிக்கும் வரை நான் தொடர்ந்து சட்ட ரீதியாக போராடுவேன். நான் வாழும் தியாகி என்பதை நம்புகிறேன். யார் மீது வேண்டுமானாலும் பொய் வழக்கு போடலாம் என்பது ஆபத்தானது. குறைந்தபட்சம் என் வழக்கை எதிர்கொள்ள எனக்கு ஒரு தளம் உள்ளது. பலருக்கு அப்படி எதுவும் இல்லை. இப்படியான பொய் வழக்குகள் பலரது குடும்பத்தையும் சீர்குலைத்து விடுகிறது" என விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்