திரைத்துறை பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம்; நடிகர் சங்கத்தில் புகாரளியுங்கள் - நடிகை ரோகிணி

பாலியல் புகாருக்கு உள்ளான நபர் 5 ஆண்டுகள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நடிகை ரோகிணி கூறியுள்ளார்.

Update: 2024-09-08 11:46 GMT

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்க 68வது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஏராளமான திரைக்கலைஞர்கள் பங்கேற்றனர்.

கேரளாவின் ஹேமா கமிட்டி போன்று தமிழ் திரையுலகிலும் கமிட்டி அமைப்பது குறித்தும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடனான மோதல் போக்கு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் பணிகளை தொடர்ந்தால் நடிகர் சங்க கட்டட பணிகள் பாதிக்கும் என்பதால் இந்த முடிவு என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறுகையில், "பொதுக்குழு முன்பாக இருந்த சவால்களை மீறி பொதுக்குழு கூட்டம் நடந்துள்ளது. பொதுக்குழு மகிழ்ச்சியாக நடந்துள்ளது. சங்கர தாஸ் சுவாமிகள் பெயரில் டெல்லி கணேஷ், விஜயகுமாரி மற்றும் நாடக கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டார்கள். 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.

நடிகைகளுக்கு பாலியல் புகார் குறித்து நடிகை ரோகிணி பேசுகையில்," 2019ம் ஆண்டிலேயே கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர், நடிகை மட்டுமின்றி எல்லாரும் புகார் கொடுக்கலாம். பாலியல் புகார் குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம், நடிகர் சங்கத்தில் புகாரளியுங்கள். வழக்கறிஞர்கள், மனநல ஆலோசகர்கள், தன்னார்வலர்களும் இந்த கமிட்டியில் உள்ளனர். புகாருக்கு உள்ளான நபர் 5 ஆண்டுகள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து வெளியே தெரிவிக்கப்படாது. எந்த பெண்ணும் பயத்துடன் இருக்கக்கூடாது. எந்த நடிகையும் தைரியமாக புகார் கூறலாம். புகார்களை தெரிவிப்பதற்கு எண்ணையும், இமெயிலையும் வழங்கி இருக்கிறோம். நடிகை மீதான புகார் பெரிதுபடுத்தப்படுகிறது. நடிகை கூறும் புகார் மட்டும் திரும்ப திரும்ப பேசப்படுகிறது. எல்லா துறையிலும் அத்துமீறல் இருக்கிறது" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்