நடிகர் முகேஷை கைது செய்ய நீதிமன்றம் தடை

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் நடிகர் முகேஷ் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-08-29 11:38 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்த அறிக்கையில் நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் பகீர் தகவலை வெளியிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் புகார் நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் எழுந்ததால் மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் நேற்றுமுன்தினம் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

அந்தவகையில், பெண் நடிகை அளித்த புகாரில் மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா மற்றும் முகேஷ் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவேறு காவல் நிலையங்களில் இருவர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நடிகர் முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்த நிலையில் முன் ஜாமீன் கோரி எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில், அடுத்த 5 நாட்களுக்கு நடிகர் முகேஷை கைது செய்யக்கூடாது என எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடிகர் முகேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்