இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா கோலாகலமாக தொடங்கியது

லண்டன்,

இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி தன்னுடைய 96 வயதில் காலமானார். அதற்குப் பிறகு, ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்தின் மன்னரானார். அவர் 3-ம் சார்லஸ் என்று அழைக்கப்படுகிறார்.

ராணியின் மறைவுக்கு பின்னர் மன்னராக சார்லஸ் அரியனை ஏறியபோதும், அவருக்கான அதிகாரப்பூர்வ முடிசூட்டு விழா நடைபெறாமலேயே இருந்து வந்தது. இந்த சூழலில் மே 6-ந் தேதி மன்னர் 3-ம் சார்லசின் முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.

கடைசியாக கடந்த 1953-ம் ஆண்டு ராணி 2-ம் எலிசபெத்தின் முடிசூட்டு விழா மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. அதன் பிறகு, 70 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த பாரம்பரிய விழா நடக்கிறது. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) இந்த விழா கோலாகலமாக நடக்கிறது. இதையொட்டி ஒட்டுமொத்த இங்கிலாந்தும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்த பாரம்பரிய விழா பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரையிலான ஊர்வலத்துடன் தொடங்கும். மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் குளிர்சாதன வசதியும், மின்சாரத்தால் இயங்கும் ஜன்னல்களும் கொண்ட சிறிய சாரட் வண்டியில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவர்.

உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா தேவாலயத்துக்குள் நுழைந்தவுடன் விழா தொடங்கும். 700 ஆண்டு கால பழமையான இருக்கையின் பின்னால் நின்று கொண்டு, கேன்டர்பரி ஆர்ச்பிஷப், அரசரை அங்கீகரித்து ஒரு அறிவிப்பை வெளியிடுவார். அப்போது, ''கடவுளே மன்னரை காப்பாற்று!'' என அனைவரும் முழக்கங்களை எழுப்புவார்கள். ராணுவ இசை மற்றும் வாத்திய கருவிகள் முழங்கும்.

Update: 2023-05-06 09:56 GMT

Linked news