ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - இந்தியாவுக்கு 3 தங்கம்

இன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-07-13 13:11 GMT

பாங்காக்,

25-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நாளில் அபிஷேக் பால் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கப் பட்டியலை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் மூன்று இந்தியர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் ஜோதி யர்ராஜி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 23 வயதான யர்ராஜி 13.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

அவருக்கு அடுத்தபடியாக ஜப்பானிய ஓட்டப்பந்தய வீரர்களான டெராடா அசுகா (13.13 வினாடிகள்) மற்றும் அயோகி மசுமி (13.26 வினாடிகள்) இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர். நான்காம் இடத்தை பிடித்த இந்திய வீராங்கனையான ராம்ராஜ் நித்யா பந்தய தூரத்தை 13.55 வினாடிகளில் கடந்தார்.

மேலும் 1500 மீட்டர் ஓட்டத்தில் அஜய்குமார் சரோஜ் தங்கம் வென்று அசத்தினார். மும்முறை தாண்டுதலில் அப்துல்லா அபூபக்கரும் தங்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் ஐஸ்வர்யா மிஸ்ரா வெண்கலம் வென்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்