சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்..? தேர்வுக்குழு தலைவர் விளக்கம்

சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கான காரணம் பற்றி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Update: 2024-07-22 16:05 GMT

image courtesy: PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி விரைவில் இலங்கைக்கு சென்று அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இலங்கை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான கமிட்டியினர், புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரின் ஆலோசனைக்கு பிறகு அணி பட்டியல் இறுதி செய்து வெளியிடப்பட்டது.

உலகக்கோப்பையை வென்றதுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா விடைபெற்று விட்டதால் இந்திய 20 ஓவர் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. உலகக்கோப்பையில் துணை கேப்டனாக பணியாற்றிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாண்ட்யாவுக்கு அடிக்கடி உடல்தகுதி பிரச்சினை ஏற்படுவதால் அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிப்பதே சரியாக இருக்கும் என்பது பயிற்சியாளர் கம்பீரின் விருப்பமாக இருந்தது. முடிவில் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன்ஷிப் 33 வயதான சூர்யகுமார் யாதவிடம் வழங்கப்பட்டுள்ளது. துணை கேப்டன் பதவியும் பாண்ட்யாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் இனி துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கான காரணம் பற்றி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெளிவுபடுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ரிஷப் பண்ட் காயத்தால் நீண்ட காலம் விளையாடவில்லை. எனவே மீண்டு வந்துள்ள அவரிடம் கேப்டன்ஷிப் சுமையை நாங்கள் கொடுக்க விரும்பவில்லை. கேஎல் ராகுல் தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. எனவே நாங்கள் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

ஹர்திக் பாண்ட்யா காயங்களை சந்தித்தபோது நல்லவேளையாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். ஆனால் நாங்கள் மீண்டும் அது போன்ற நிலைமையை விரும்பவில்லை. சுப்மன் கில் 3 பார்மட்டிலும் விளையாடக்கூடிய வீரராக நாங்கள் கருதுகிறோம். சில வருடங்களாக அவர் நல்ல தரத்தை காண்பித்துள்ளார்.

எனவே கேப்டன்ஷிப் பற்றி சூர்யகுமார், ரோகித் போன்றவர்களிடம் அடுத்த 2 வருடங்களில் கற்றுக்கொள்ள அவரைப் போன்றவரை நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில் திடீரென ஒருவர் காயம் அல்லது பார்மை இழக்கும்போது நாங்கள் புதிய கேப்டனை சோதிக்க விரும்பவில்லை. சுப்மன் கில்லிடம் ஓரளவு தலைமை பண்புகள் இருக்கிறது. வாழ்க்கையில் எதுவும் உறுதியானது கிடையாது. ஆனால் வருங்கால கேப்டனாக வளர்வதற்கு தேவையான அனுபவத்தை பெறுவதற்காகவே அவருக்கு இந்த பொறுப்பை நாங்கள் கொடுத்துள்ளோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்