பாண்ட்யாவுக்கு பதில் சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்..? - அகர்கர் விளக்கம்

இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-07-22 08:44 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி விரைவில் இலங்கைக்கு சென்று அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இலங்கை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையிலான கமிட்டியினர், புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரின் ஆலோசனைக்கு பிறகு அணி பட்டியல் இறுதி செய்து வெளியிடப்பட்டது.

உலகக்கோப்பையை வென்றதுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா விடைபெற்று விட்டதால் இந்திய 20 ஓவர் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. உலகக்கோப்பையில் துணை கேப்டனாக பணியாற்றிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாண்ட்யாவுக்கு அடிக்கடி உடல்தகுதி பிரச்சினை ஏற்படுவதால் அவருக்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமிப்பதே சரியாக இருக்கும் என்பது பயிற்சியாளர் கம்பீரின் விருப்பமாக இருந்தது. முடிவில் இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன்ஷிப் 33 வயதான சூர்யகுமார் யாதவிடம் வழங்கப்பட்டுள்ளது. துணை கேப்டன் பதவியும் பாண்ட்யாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இருக்கிறது. சுப்மன் கில் இனி துணை கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா முழுமையான பிட்னஸ் கொண்டிருக்கவில்லை என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். அதனாலயே சூர்யகுமாரை புதிய கேப்டனாக நியமித்ததாகவும் அவர் அறிவித்துள்ளார். இது பற்றி மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கவுதம் கம்பீருடன் இணைந்து அவர் பேசியது பின்வருமாறு:-

"ஹர்திக் பாண்ட்யா இப்போதும் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். இருப்பினும் பிட்னஸ் என்பது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அது அவரை தேர்வு செய்ய பயிற்சியாளர் அல்லது தேர்வுக்குழுவுக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. அவரது விஷயத்தில் பிட்னஸ்தான் சவாலாகும். ஏனெனில் நாங்கள் அடிக்கடி காயமின்றி அதிகமாக விளையாடக்கூடிய ஒருவரை விரும்புகிறோம். அந்த வகையில் சூர்யகுமார் கேப்டனாக செயல்படுவதற்கு தேவையான தகுதிகளைக் கொண்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

அதே சமயம் ஹர்திக் பாண்ட்யாவை நாங்கள் சிறப்பாக கையாள்வோம் என்று கருதுகிறோம். டி20 உலகக்கோப்பையில் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் அவர் என்ன செய்தார் என்பதை நாங்கள் பார்த்தோம். கேப்டன்ஷிப் பற்றி ஹர்திக் பாண்ட்யாவிடமும் நாங்கள் பேசியுள்ளோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்